Thursday, September 25, 2014

Arulvakku 25.09.2014

முதல் வாசகம்

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2-11
வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? ஒரு தலைமுறை மறைகின்றது; மறு தலைமுறை தோன்றுகின்றது; உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது. ஞாயிறு தோன்றுகின்றது; ஞாயிறும் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது; பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது. எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன; எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை; மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன. அனைத்தும் சலிப்பையே தருகின்றன; அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை; எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை. முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. ஏதேனும் ஒன்றைப் பற்றி, `இதோ, இது புதியது' என்று சொல்லக் கூடுமா? இல்லை. அது ஏற்கெனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை; அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப் போவதில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 90: 3-4. 5-6. 12-13. 14, 17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
`மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன
நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி
5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்;
அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை?
உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா. 
லூக்கா 9:7-9
பொதுக்காலம், வாரம் 25 வியாழன்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், ``இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர். வேறு சிலர், ``எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், ``முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர். ஏரோது, ``யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
இயேசுவே நமது தேடல்
இயேசுவின் சீடர்களுடைய போதனை மக்களின் நடுவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை, ஏரோதுவின் வார்த்தைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஏரோதுவின் குழப்பமான மனநிலை இதை தெளிவுபடுத்துகிறது. இப்படிப்பட்டச்சூழ்நிலையில் ஏரோது இயேசுவைக்காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்ததாக, நற்செய்தியாளர் சொல்கிறார்.
இயேசுவை எதற்காக ஏரோது தேட வேண்டும்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழுவது இயல்பு. அதிசயங்களையும், அற்புதங்களையும் பார்ப்பதற்காகவா? இயேசு இறைவாக்கினர் என்பதால் அவரிடம் ஆசீர் வாங்குவதற்காகவா? அல்லது யோவானின் தலையை வெட்டச்செய்தேன். ஆனால், மீண்டும் அவர் வந்துவிட்டார் என்கிற குற்ற உணர்ச்சியிலா? பயத்திலா? இந்தக்கேள்விகளுக்கு இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். ஏனென்றால், ஏரோதுவின் மனநிலையைப்பார்க்கின்றபோது, நிச்சயமாக இந்த காரணங்களுக்காக, அவர் இயேசுவைப்பார்க்க ஆவல் கொண்டிருக்க மாட்டார். அப்படியென்றால் எதற்காக? எங்கே தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில், இயேசுவை எப்படியாவது வஞ்சித்து கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் இருந்திருக்கும். ஏரோதுவின் தேடல் சுயநலம் மிகுந்த தேடல்.
என் வாழ்க்கையில் இயேசுவை எதற்காக நான் தேடுகிறேன்? எனது சுயநலத்திற்காகவா? அல்லது பொதுநலத்திற்காகவா? அல்லது அன்பினால் உந்தப்பட்டு தேடுகிறேனா? என்னுடைய தேடல் எப்படி இருக்க வேண்டும் என சிந்திப்போம்.
  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment