Sunday, September 28, 2014

Arulvakku 28.09.2014

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 25-28
ஆண்டவர் கூறுவது: `தலைவரின் வழி செம்மையானதாக இல்லை' என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 25: 4-5. 6-7. 8-9
பல்லவி: ஆண்டவரே, உம் இரக்கத்தையும், பேரன்பையும் நினைந்தருளும்.
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்.
ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;
உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன். - பல்லவி
6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்.
ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும்,
உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;
ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.அல்லேலூயா.

மத்தேயு 21:28-32
பொதுக்காலம் 26 வாரம் ஞாயிறு
நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32


அக்காலத்தில் இயேசு கூறியது: ``இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், `மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, `நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, `நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?'' என்று கேட்டார். அவர்கள் ``மூத்தவரே'' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ``வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
கடவுளின் உண்மையான மகன்
யூதர்களில் அதிகார வர்க்கத்தினர் கடவுளுக்கு கீழ்ப்படிவதாக சொல்லிக்கொண்டனர். ஆனால், உண்மையில் கீழ்ப்படியவில்லை. பாவிகளும், வரிதண்டுகிறவர்களும் மனம்போன போக்கில் வாழ்ந்தனர். கடவுளைப்பற்றி கவலை கொள்ளாமல் இருந்தனர். ஆனால், இறுதியில் கடவுளிடம் திரும்பி, திருந்தி வந்தனர். இதுதான் இன்றைய நற்செய்தியின் சாராம்சம். இந்த நற்செய்தியில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய உண்மை, இரண்டு பேருமே பாராட்டப்படவில்லை. நடப்பது அப்படியே சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். இரண்டுபேரில் யார் சிறந்தவர்? என்கிற கேள்வி இங்கே எழுப்பப்படவில்லை.
இரண்டு மகன்களுமே தந்தைக்கு திருப்தி தரவில்லை. இரண்டுபேருமே தந்தைக்கு மகிழ்ச்சி தரவில்லை. ஆனால், இரண்டாவது மகன் முதல் மகனைவிட பரவாயில்லை என்கிற தொனியில் நற்செய்தி தரப்படுகிறது. ஒரு தந்தையின் உண்மையான மகன் என்று சொல்லப்படுகிறவர், தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அதை அப்படியே செய்துமுடிக்கிறவர் தான். அதாவது, தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கையளிப்பது. தனது விருப்பங்களை விடுத்து, தந்தையின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பது. இயேசு உண்மையான மகனுக்கு எடுத்துக்காட்டாகத்திகழ்கிறார்.
நாம் ஒவ்வொருவருமே கடவுளின் பிள்ளைகள். நான் எப்படிப்பட்ட பிள்ளையாக இருக்கிறேன்? என்ற கேள்வியை நாம் நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும். கடவுளுக்கு கீழ்ப்படிகிற உண்மையுள்ள மகனாக மாற, முயல்வோம்.
  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment