Saturday, September 27, 2014

Arulvakku 27.09.2014

முதல் வாசகம்

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9 -12: 8

இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. ``வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே'' என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
`மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில்
கடந்துபோன நேற்றைய நாள் போலவும்
இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்;
அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை?
உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.



லூக்கா 9:43-45

பொதுக்காலம், வாரம் 25 சனி



நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45

அக்காலத்தில் இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், ``நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார். அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.கள்.

-------------------------

புகழுக்கு மயங்காத இயேசு

இதற்கு முந்தைய பகுதியில் இயேசு பேய் பிடித்த சிறுவனின் பிணிதீர்க்கிறார். பேய்களுக்கு எதிராக வல்லமையையும், அதிகாரத்தையும் பெற்று விளங்கியவர் இயேசு கிறிஸ்து. சீடர்களால் விரட்ட முடியவில்லை என்பது இயேசுவுக்கு வருத்தத்தைக்கொடுத்தாலும், தன்னுடைய வெற்றியே, நிச்சயம் சீடர்களுக்கு நம்பிக்கையைத்தரும் என்பதில் திருப்தி அடைகிறார். எனவே, தானே அந்தப் பேயை விரட்டுகிறார்.

பேய்களுக்கு எதிராக இயேசு அதிகாரத்தோடு பேசுவதைப்பார்த்து, மக்கள் வியப்படைகிறார்கள். அவரை மகிமைப்படுத்துகிறார்கள். அவரை மக்கள் புகழத்தொடங்குகிறபோது, இயேசு தன்னுடைய பாடுகளை அறிவிக்கிறார். இயேசு புகழுக்கும், பெயருக்கு மயங்குகிறவர் அல்ல. தன்னுடைய இலக்கில் தெளிவாக இருக்கிறார். அது இயேசுவின் தனி இயல்பு. மக்களின் புகழ்ச்சிக்கு மயங்குவது இயேசுவுக்கு எளிதாக இருந்திருக்கும், சவாலாக இருந்திருக்கும். ஆனால், இயேசு தெளிந்த சிந்தனையோடு இருக்கிறார்.

நமது வாழ்வில் இயேசு தான் நமது தெய்வம் என்ற தெளிந்த சிந்தனையோடு இருக்கிறோமா? அல்லது பணமும், புகழும் நமது மனதை மாற்றக்கூடிய சலன மனநிலையை நாம் பெற்றிருக்கிறோமா? பணத்திற்கும், புகழுக்கும் அஞ்சாத தெளிந்த இயேசுவின் மனநிலையை நாமும் பெறுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment