Friday, September 26, 2014

Arulvakku 26.09.2014

முதல் வாசகம்

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன். கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 144: 1,2. 3-4

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1ய என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே!
என் கேடயமும் புகலிடமும் அவரே! -பல்லவி

3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்?
மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்?
4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்;
அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

லூக்கா 9:18-22
பொதுக்காலம், வாரம் 25 வெள்ளிநற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
இயேசுவுடனான நம் உறவு
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வு, பேதுருவின் அறிக்கை என்றால் அது மிகையாகாது. இயேசு யெருசலேம் செல்வதற்கு தன்னை தயார்படுத்திவிட்டார்(லூக்கா 9: 51). தான் யெருசலேமுக்குச்சென்று பாடுபடப்போவது இயேசுவுக்கு நன்றாகத்தெரியும். இதற்காகத்தான் இயேசு மண்ணுலகிற்கு வந்திருக்கிறார். ஆனால், தான் பாடுகள்படப்போவதற்கு முன்னதாக, யாராவது தன்னை முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறார்களா? என இயேசு அறிய விரும்புகிறார். எனவே அவர் இந்தக்கேள்வியைக்கேட்கிறார்.
பேதுருவின் இந்தப்பதில் இயேசுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையையும் தந்திருக்க வேண்டும். எதற்காக இந்தப்பூமிக்கு வந்திருக்கிறோமோ, அதை தான் நிறைவேற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது உண்மையில், இயேசுவுக்கு அதிக மகிழ்ச்சி. பேதுரு ஒன்றும் படித்தவரல்ல. சாதாரண, படிக்காத, பாமர மீனவர். உணர்ச்சிகரமானவர். எதையும் உள்ளத்தில் மறைக்காது, வெளிப்படையாகப்பேசுகிறவர். அப்படிப்பட்ட பேதுரு, இயேசுவை சரியாகப்புரிந்து கொண்டிருக்கிறார் என்றால், தான் அவர்களின் மனதில் சிறுநெருப்பை, அணையாத நெருப்பை பற்ற வைப்பதில் வெற்றிபெற்று விட்டேன் என்று இயேசு ஆனந்தம் அடைந்திருக்க வேண்டும். இனி இந்த நெருப்பை யாராலும் அணைக்க முடியாது என்ற நிறைவு அவருக்கு மகிழ்வைத்தந்திருக்கும்.
மற்றவர்களுக்கு இயேசு யார்? என்று கேட்பதைக்காட்டிலும், இயேசு எனக்கு யார்? என்று நாம் ஒவ்வொருவரும் கேட்டுப்பார்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் எனக்கும் இயேசுவுக்குமான உறவு என்ன? இயேசுவுக்கு நான் என்ன உறவுமுறை கொண்டிருக்கிறேன்? என்று நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம்.
  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment