Monday, September 29, 2014

Arulvakku 29.09.2014

முதல் வாசகம்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப் பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

(அல்லது )
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 12: 7-12
விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள். பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: ``இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை. இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள்.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 
பதிலுரைப் பாடல்
திபா 138: 1-2ய. 2b-3. 4-5 (பல்லவி: 1உ)
பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2 உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். -பல்லவி
2 உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.
5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.
யோவான் 1:47-51
தூய மிக்கேல், கபிரியோல், இரஃபேல்
நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ``இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ``என்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ``பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, ``உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார். மேலும் ``வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
கபடற்றவர்
இயேசு, நத்தனியேலைப்பார்த்து, ”இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று கூறுகிறார். நத்தனியேலுக்கு அது மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம். ஏனென்றால், உண்மையானவர், கபடற்றவர் என்பது மிகப்பெரிய ஆசீர்வாதமாக விவிலியத்தில் சொல்லப்படுகிறது. ”எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர்” (திருப்பாடல் 32: 2). கடவுளின் ஊழியரைப்பற்றி இறைவாக்கினர் எசாயா பேசுகிறபோது, ”வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை” (எசாயா 53: 9) என்கிறார். ஆக, “கபடற்றவர்” என்கிற வார்த்தை சிறந்த பாராட்டு மொழி.
இயேசு நத்தனியேலை அத்திமரத்தின் கீழ் பார்த்ததாகக்கூறுகிறார். அத்திமரம் என்பது சமாதானத்தைக்குறிக்கும் சொல். 1அரசர்கள் 4: 25 ல் பார்க்கிறோம்: ”யூதா, இஸ்ரயேல் மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் திராட்சைத்தோட்டங்களையும், அத்திமரங்களையும் உடைமையாகக்கொண்டிருந்தனர்”. அதேபோல் மீக்கா 4: 4 ல் சொல்லப்படுகிறது, ”அவர்களுள் ஒவ்வொருவரும் தம் திராட்சைத்தோட்டத்தின் நடுவிலும், அத்திமரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர். அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை”. இங்கே மேற்சொன்ன இரண்டு இறைவார்த்தைகளும் அத்திமரமும், திராட்சைத்தோட்டமும் சமாதானத்தையும், பாதுகாப்பையும் குறிப்பதாகக்கூறுகிறது. நத்தனியேல் தனக்குள் இஸ்ரயேல் மக்களின் சமாதானத்தை விரும்பினார். மக்கள் அமைதியோடும், பாதுகாப்போடும் இருக்க வேண்டும் என்பதை எண்ணினார். தனக்குள் இருந்த எண்ணங்களை இயேசு அப்படியே வெளிப்படுத்தியபோது, நத்தனியேல் ஆச்சரியப்பட்டு, மெய்மறந்து நின்றார். இயேசுவை கடவுளின் மகனாக ஏற்றுக்கொள்கிறார்.
நாம் எப்போதும் நல்லவற்றையே எண்ண வேண்டும். சமாதானத்தையும், மக்களின் பாதுகாப்பையும் நினைக்க வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்போது, நாமும் நத்தனியேலைப்போல இறையாசீரைப் பெற்றுக்கொள்வோம்.
  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

No comments:

Post a Comment